கொரோனா நோய் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை கடந்து வருகிறது. தற்போது சுமார் 7 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையால் மாநில அரசு திணறி வருகிறது.
இந்தநிலையில் ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசுக்கு மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது குறித்து அவர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நோயாளிகளின் உயிரை காக்க மாநில அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த தருணத்தில் நாங்கள் மத்திய அரசுக்கு மிகவும் தாழ்மையான முறையில் வேண்டுகோள் விடுக்கிறோம். மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலில் விழுவதற்குக்கூட மகாராஷ்டிரா அரசு தயாராக உள்ளது.
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வினியோக உரிமை மத்திய அரசின் கையில் உள்ளது. எனவே மாநிலத்திற்கு போதிய ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் எனது கோரிக்கையை முன்வைக்கிறேன். ஆக்சிஜன் எடுத்து வரும் டேங்கர் லாரிகள் விரைவாக செல்ல தனி வழித்தடத்துக்கும் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்” என்று கூறினார்.