பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இருக்கும் பாகிஸ்தான் எல்லைப் பகுதி ரோரன்வாலா (Roranwala). இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர்மீது புறா ஒன்று வந்து அமர்ந்திருக்கிறது. இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மாலை வேலையில் நடந்திருக்கிறது. இதையடுத்து நேற்று (21.4.2021) அந்த புறா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது பஞ்சாப் காவல்துறை.
எஃப்.ஐ.ஆர் பதியக் காரணம்?
ரோரன்வாலா பகுதியில் பிடிபட்ட அந்தப் புறாவின் ஒரு காலில் மோதரம் போலத் துண்டுச் சீட்டு ஒன்று டேப் கொண்டு ஒட்டப்பட்டிருந்தது. அந்த துண்டுச் சீட்டில் சில எண்கள் இருந்திருக்கின்றன. அந்த எண்கள் தொலைப்பேசி எண்ணாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தவுடன், தன் உயர் அதிகாரிகளுக்கு அந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
தீவிரவாதிகள் புறாக்களுக்குப் பயிற்சியளிப்பதாலும், தீவிரவாத செயல்கள், தகவல் தொடர்புக்காகப் புறாக்களைப் பயன்படுத்துவதாலும் புறா மீது சந்தேகம் எழுந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து அந்தப் புறாவை கஹான்கார்க்(kahankarg) உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். வெள்ளை, கருப்பு நிறத்திலிருக்கக் கூடிய அந்தப் புறா மீது கஹான்கார்க் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டிருக்கிறது.
Also Read: கொரோனா முதல் அலை Vs இரண்டாம் அலை: எச்சரிக்கும் புள்ளிவிவரங்கள்!
புறா காலில் கட்டப்பட்டிருந்த துண்டுச் சீட்டிலிருக்கும் எண் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், புறா பாகிஸ்தானிலிருந்து திட்டமிட்டு இந்திய எல்லைக்குள் அனுப்பப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
புறா மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டிருக்கும் விநோத சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஜம்மு காஷ்மீரிலுள்ள கத்துவா எல்லையில் இதேபோல ஒரு புறா பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.