உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் வைரஸ் பரவல் நாம் நினைத்து கூட பார்த்திராத வேகத்தில் இருக்கிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலும் , உயிரிழப்பிலும் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. வல்லரசு நாடான அமெரிக்கா மூன்று கொரோனா அலைகளை கண்டிருக்கிறது. அமெரிக்காவில் 2020 ஜனவரி மாதம் வைரஸ் பரவத் தொடங்கியது. முதல் அலையில் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் பாதிப்பு 36 ஆயிரத்து 388 என்ற உச்சத்தை தொட்டு குறைந்தது. பின்னர் ஜூன் மாதம் இரண்டாம் அலை உருவாகி ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 79ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி என்ற உச்சத்தை எட்டியது. செப்டம்பரில் இதில் 25 ஆயிரமாக குறைந்து பின்னர் டிசம்பர் வாக்கில் மூன்றாம் அலை தொடங்கியது. 2021 ஜனவரி 8ஆம் தேதி மூன்றாம் அலையின் உச்சபட்சமாக 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது அமெரிக்காவில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
பிரேசிலை எடுத்துக் கொண்டால் கொரோனா முதல் அலையில் ஜூலை மாதம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்ற உச்சத்தை எட்டியது. பின்னர் அது குறைந்து அக்டோபருக்கு பின் வேகமெடுத்து கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது அலை உருவாகி நாளொன்றுக்கு 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். பின்னர் மூன்றாவது அலையும் உருவாகி கடந்த மார்ச் 27ஆம் தேதி 97 ஆயிரம் பாதிக்கபப்ட்டது உச்சமாக இருந்தது.
பிரான்ஸை எடுத்து கொண்டால் அங்கு முதல் அலையில் உச்சமாக கடந்த 2020, மார்ச் இல் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் அக்டோபர் வாக்கில் இரண்டாம் அலை தொடங்கி நவம்பரில் உச்சமாக 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். மீண்டும் பாதிப்பு குறைந்து இம்மாத தொடக்கத்தில் மூன்றாம் அலை உருவாகி நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் பாதிப்பு என்ற உச்சத்தை எட்டி தற்போது கணிசமாக குறைந்துள்ளது.
பிரிட்டனை எடுத்துக் கொண்டால் முதல் அலையில் அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாளொன்றுக்கு 7 ஆயிரம் பாதிக்கப்பட்டதே உச்சமாக இருந்தது. ஜூன் மாதத்தில் இது கணிசமாக குறைந்தது. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி கடந்த ஜனவரியில் நாளொன்றுக்கு 67 ஆயிரம் பேர் பாதிப்பு என்ற உச்சத்தை எட்டியது. தற்போது அதிலிருந்து மீண்டு சுமார் 3 ஆயிரம் பேருக்கு தொற்று என குறைந்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா முதல் அலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில் 97 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதே உச்சபட்ச எண்ணிக்கையாக இருந்தது. அதாவது முதல் அலையில் உச்சத்தை எட்ட இந்தியாவுக்கு 7 மாதங்கள் ஆனது. ஆனால் இரண்டாவது அலையில் கிட்டதட்ட இரண்டரை மாத காலத்திலேயே நாளொன்றுக்கு இரண்டரை லட்சம் பேருக்கு பாதிப்பு என்ற உச்சத்தை எட்டி இருக்கிறோம்.
அமெரிக்காவில் இதுவரை 3 கோடியே 24 லட்சத்துக்கும் அதிமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக இந்தியாவில் ஒரு கோடியே 53 லட்சம் பேரும், பிரேசிலில் ஒரு கோடியே 39 லட்சம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதே போல் பிரான்சில் 52 லட்சம் பேருக்கும், பிரிட்டனில் 43 லட்சம் பேருக்கும் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா – கொரோனா 3 அலைகள்
2020 ஏப்ரல் – 36,388
2020 ஜூலை – 79,000
2021 ஜனவரி – 3,00,000
பிரேசில் – கொரோனா 3 அலைகள்
2020 ஜூலை – 70,000
2021 ஜனவரி – 87,000
2021 மார்ச் – 97,000
பிரான்ஸ் – கொரோனா 3 அலைகள்
2020 மார்ச் – 7,000
2020 நவம்பர் – 88,000
2021 ஏப்ரல் – 60,000
பிரிட்டன் – கொரோனா 2 அலைகள்
2020 ஏப்ரல் – 7,000
2021 ஜனவரி – 67,000
இந்தியா – கொரோனா 2 அலைகள்
2020 செப்டம்பர் – 97,000
2020 ஏப்ரல் – 2,70,000
உலக அளவில் கொரோனா பாதிப்பு
அமெரிக்கா – 3,24,75,043
இந்தியா – 1,53,21,089
பிரேசில் – 1,39,77,713
பிரான்ஸ் – 52,96,222
பிரிட்டன் – 43,90,783