கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மேலும் பல தடுப்பூசிகளுக்கு அனுமதி தருமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிப்பதுடன் தடுப்பூசி செலுத்துவதற்கான வயது வரம்புகளும் தளர்த்தப்பட வேண்டும் என சோனியா காந்தி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தொற்றுப் பரவலைத் தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்படுவோரை அடையாளம் கண்டு அவர்களது வாழ்வாதாரத்தைக் காக்க, வங்கிக் கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவும் பிரதமர் மோடியை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா 2ஆவது அலை அச்சத்தால் புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறும் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி தன் கடிதத்தில் கூறியுள்ளார்.