ஜெர்மனியைச் சேர்ந்த பயோNடெக் நிறுவனமும் அமெரிக்க நிறுவனமான ஃபைஸரும் இணைந்து கண்டுபிடித்த கோவிட் 19 தடுப்பூசி, 12 முதல் 15 வயது வரையான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக 100 சதவிகிதம் செயல்திறன் மற்றும் வலுவான ஆன்டிபாடி கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி விஷயத்தில் இந்தியாவின் நிலையென்ன என்று தெரிந்துகொள்ள தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமாரிடம் பேசினோம்.
“ஃபைசரும் பயோ N டெக்கும் அவர்கள் ஏற்கெனவே கண்டுபிடித்த mRNA தடுப்பூசியைத்தான் தற்போது குழந்தைகளுக்கு ஏற்றபடி மாற்றியமைத்திருக்கிறார்கள். முதலில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைச் செலுத்தி வந்தார்கள். தற்போது வளரிளம் பருவத்தினருக்கும் செலுத்தி ட்ரையல் செய்திருக்கிறார்கள். அதில், அந்தத் தடுப்பூசி 100 சதவிகித செயல்திறனுடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
எப்படியும் எல்லா நாடுகளிலும் குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றுதான் ஆகவேண்டும். அப்படிச் செல்லும்போது கொரோனா பரவல் அதிகரிக்கிறது. அதனால் எல்லா நாடுகளுமே குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதுதான் பாதுகாப்பு. அதற்கு ஒரு ட்ரையல் செய்து பார்த்தே ஆக வேண்டும்.
அதைத்தான் அந்த நிறுவனங்கள் செய்திருக்கின்றன. அதன் முடிவையும் வெளியிட்டிருக்கின்றன.
நம் நாட்டில் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கும் கோவிஷீல்டுக்கும் இப்போதுதான் குழந்தைகளுக்குச் செலுத்தும் ட்ரையல் செய்வதற்கான அனுமதியைக் கேட்டிருக்கிறார்கள்.
Also Read: `கோவிட்-19′ : 2-ம் அலை தீவிரமடைய காரணமாகும் தமிழ்நாடு… மத்திய அரசின் அதிர்ச்சி புள்ளிவிவரம்!
குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும், கொரோனா இதுவரை லேசான மற்றும் மிதமான அளவில்தான் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதனால் பெரியவர்களிடம் 90 சதவிகிதம் செயல்திறனுடன் இருக்கும் தடுப்பூசிகள் குழந்தைகளிடம் 100 சதவிகிதம் செயல்திறனுடன் இருக்கும்.
நம் நாட்டிலும் ஜூன் மாதத்துக்குள் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என்ற நிலை வந்தால் பாதுகாப்பாக கல்விக்கூடங்களுக்குச் செல்லலாம்” என்கிறார் தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமார்.