அமெரிக்க மாநிலமான மிசவுரியில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், இந்த கொலை தொடர்பாக உள்ளூர்நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது இனவெறுப்பு காரணமாக நிகழ்ந்த குற்றமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்கா மாநிலமான மிசவுரியில் சாஃப்ட்வேர் பொறியாளராக பணியாற்றும், மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் 32 வயதான ஷெரீப் ரஹ்மான் கான். இவர் கடந்த புதன்கிழமை, செயின்ட் லூயிஸில் உள்ள யுனிவர்சிட்டி சிட்டி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக நடந்த காவல்துறை விசாரணையில், 23 வயதான கோல் ஜே மில்லர் என்ற உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டார். இந்த நபர் உயிரிழந்த ஷெரீப் ரஹ்மான் கானின் பெண் தோழியுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று மில்லர், ரஹ்மான் கானின் பெண் தோழி வசித்த யுனிவர்சிட்டி சிட்டி குடியிருப்பிற்கு வந்தபோது கானுக்கும் மில்லருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது கான், மில்லரை குத்தியதாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து மில்லர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
இது ஒருவேளை இனவெறுப்பு குற்றமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கொரோனா தொற்று நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, ரஹ்மான் கானின் இறுதி சடங்குகள் நாளை அமெரிக்காவிலேயே செய்யப்படும் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.