தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து கட்சியின் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “.உங்கள் உழைப்பை ஊர் பேசட்டும், நாம் செய்த நன்மைகளை நாடு பேசட்டும் வெற்றிச் செய்தி எட்டுத்திக்கும் முழங்கட்டும். தமிழக மக்களின் வாழ்வு செழிக்கட்டும். நாட்டைக் கெடுப்பவர்கள் ஆட்சி அமைத்துவிடாமல் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி தொடரட்டும்.
இந்தத் தேர்தல் நீதிக்கும் அநீதிக்கும் நடைபெறும் போர்க்களம். இதில் நீதி வெல்ல வேண்டும். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் யுத்தம் இதில், தர்மம் வெல்ல வேண்டும். மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வாக்குகளாக மாற்ற வேண்டும்.
சித்ரவதையில் சிக்கித் தவித்த சீதையை மீட்ட அனுமனை போல தமிழக மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.