தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மின் தேவை அதிகரித்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின்வெட்டு புகார்கள் எழுந்துள்ள நிலையில் மின் தேவை அதிகரிப்பால் மின்வெட்டு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் மின்விசிறி, ஏசி மற்றும் கூலர் உள்ளிட்டவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அண்மை நாட்களாக மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் தமிழகத்தின் மின் தேவை 16 ஆயிரத்து 561 மெகாவாட்டாக உயர்ந்தது என்றும் வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் மின்சார பயன்பாடு 362 மில்லியன் யூனிட் என்ற அளவை எட்டியது என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

image

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 151 மெகாவாட் மின் தேவை இருந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியே சென்னையில் மின் தேவை 3 ஆயிரத்து 277 மெகாவாட் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இது ஒட்டுமொத்த கேரளா மாநிலத்துக்கான மின் தேவையை விட அதிகம் என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

வெயிலை சமாளிக்க சென்னையில் ஏசி பயன்பாடு அதிகரித்திருப்பதாக கூறும் மின்வாரிய அதிகாரிகள் மாலை 6 மணிக்கு பின் தேவை பல மடங்கு உயர்வதாக கூறுகின்றனர். இது மட்டுமல்ல தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால் விவசாயத்திற்கு மட்டும் சராசரியாக நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்.

ஏற்கனவே பல இடங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மின் தேவையும் அதிகரித்திருப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது , போதிய மின்சாரம் இருப்பதாக கூறுகின்றனர். மின் வெட்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் மத்திய தொகுப்பில் இருந்தும் காற்றாலை மின் உற்பத்தி மூலமும் போதிய மின்சாரம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.