மரங்களில் தண்ணீர் குடுவைகள் அமைத்து பறவைகளின் தாகம் தீர்த்து வருகிறது கர்நாடாகாவில் உள்ள ஒரு மாநகராட்சி.
தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வறட்சியால் நகரம் மற்றும் கிராமங்களில் தண்ணீரின்றி நீர்நிலைகள் வற்றி போய்விட்டன. இதனால் பல இடங்களில் பறவைகள் தாகம் தணித்துக் கொள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை. இச்சூழலில், தண்ணீரின்றி பறவைகள் தவித்து வருவதை அறிந்த கர்நாடகாவில் உள்ள கலாபுராகி மாநகராட்சி, மரங்களில் குடுவைகளை கட்டி தொங்கவிட்டு அவற்றில் தண்ணீரை நிரப்பி பறவைகளின் தாகத்தை தீர்க்கலாம் என்று முடிவு செய்தது.
அதன்படி தற்போது தோட்டங்கள், வயல்வெளிகள், வறண்டுபோன நீர்நிலைகளில் உள்ள மரங்களில் குடுவைகள் அமைத்து அதில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை நிரப்பி வருகின்றனர். தற்போது இந்த பகுதிகளுக்கு வரும் பறவைகள் மரங்களில் வைக்கப்பட்டுள்ள குடுவைகளில் தண்ணீரை அருந்தி தாகம் போக்கி வருகின்றன.
இதுகுறித்து கலாபுராகி மாநகராட்சி ஆணையர் சினேகல் சுதாகர் கூறுகையில், ‘’2 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து மீண்டும் தண்ணீரை நிரம்பி பறவைகளின் தாகம் தீர்த்து வருகிறோம். இதேபோல் அனைத்து பொதுமக்களும் முன்வந்து தங்களால் முயன்ற தண்ணீரை பறவைகளுக்கு வைத்து உதவ வேண்டும். பறவை இனங்களை காக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் ‘வாட்டர் பாயிண்ட்’ அமைத்து வருகிறோம்’’ என்றார்.