மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் வீர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டினருகே வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. வெடிப்பொருட்களுடன் காரை நிறுத்தியதாக, மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சச்சின் வாஸியை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து மும்பை காவல் ஆணையராக இருந்த பரம் வீர் சிங், பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் முதல்வர் அலுவலகத்துக்கு அவர் அனுப்பியிருந்த இ-மெயிலில், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலிப்பதற்கு நெருக்கடி தந்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சச்சியின் வாஸியை அழைத்து, பணத்தை வசூலிக்க உதவுமாறு கூறியதாகவும் பரம் வீர் சிங் தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா அரசியலில் இது பெரும் புயலை கிளப்பியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள பரம்வீர் சிங், அமைச்சர் அனில் தேஷ்முக் பல்வேறு விசாரணைகளில் குறுக்கிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.