வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்கள், புதுப்புது யுக்திகளைக் கையாண்டு மக்களை கவர முயற்சித்து வருகின்றனர். மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி.காசிராமன் கிராமங்கள் தோறும் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் போது அங்குள்ள கருவேலமரங்களை அரிவாளைக் கொண்டு வெட்டி “இயற்கையைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு வாக்கு சேகரிக்கிறார்.
அதேபோல், நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் தங்க.கதிரவன் இன்று நாகூர் வண்டிப்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்மணி ஒருவர் துணி துவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வேட்பாளர், அவரை நகரச் சொல்லிவிட்டு அந்த இடத்தில் அமர்ந்தார். பின்பு, அங்கிருந்த துணியைத் துவைத்தவாரே இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பெண்மணியிடம் துணியை வாங்கிய அ.தி.மு.க வேட்பாளர் அதனைத் துவைத்து, சோப்பு போட்டுப் பிழிந்து அப்பகுதியிலிருந்த அனைத்து மக்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். நாகூரில் அ.தி.மு.க வேட்பாளர் துணி துவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய தங்க.கதிரவன், “பெண்கள் கஷ்டப்பட்டு முதுகுவலிக்க துணி துவைத்த காலம் போதும். பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும் என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்தல் அறிக்கையை விளக்கி வாக்கு சேகரித்தேன். தேர்தல் பிரசாரத்தில் இதெல்லாம் ஒரு உற்சாகம்தான்..!” என்றார்.