தமிழகம் போலவே கேரளாவில் பெண் அரசியல் தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆர்.கவுரி அம்மா, அக்காமா செரியன், கே.ஓ. ஆயிஷா பாய், சுஷீலா கோபாலன் மற்றும் கே.கே. ஷைலாஜா என அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பெண் அரசியல் தலைவர்கள் ஏராளம். இவர்கள் தங்கள் கட்சிகளிலும், அமைச்சரவையிலும் முக்கியமான பதவிகளை வகித்துள்ளனர். இத்தனை பெண் அரசியல் தலைவர்கள் இருந்தாலும், அம்மாநில பெண்கள் மத்தியில் இருக்கும் ஒரு குறை… ஒரு பெண் முதல்வரை இதுவரை கேரளம் பார்த்ததில்லை என்பதே.
கேரளத்தில் இதுவரை ஒரு பெண் முதல்வர் ஏன் சாத்தியமில்லாமல் இருந்து வருகிறது என்கிற கேள்விக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலாஜா, ‘தி நியூஸ் மினிட்’-டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதில், “ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒரு பெண் முதல்வர் பதவியை வகிக்க வேண்டியது அவசியம் என்றில்லை என்பது எனது உணர்வு. ஒரு பெண் முதல்வரானதால், பெண்கள் விடுதலை அல்லது சுதந்திரம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்று நாங்கள் கூற முடியாது. அது சாத்தியமுமில்லை.
கேரளாவில் ஆயிரக்கணக்கான பெண் தலைவர்கள் உள்ளனர். உள்ளூர் மட்டத்தில் மட்டும் பல பெண்கள் தங்கள் பலத்தைக் காட்டியுள்ளனர். ஒரு பெண் தனக்கு வாய்ப்பு கிடைத்த இடமெல்லாம் தன் வலிமையையும் வீரியத்தையும் காட்ட வேண்டும். நான் ஒரு பெண் என்பதால் எனது சாதனைகள் நடந்ததாக நான் கூறவில்லை. எனது ஆண் சகாக்களைப் போன்ற கடமைகளையும் பொறுப்புகளையும் நான் நிறைவேற்றினேன்.
ஒரு பெண் உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தாலும், அவர் தனது நிலையை எவ்வாறு பயன்படுத்துகிறாள், அவரது முடிவெடுக்கும் சக்தி மற்றும் ஒரு நெருக்கடியின்போது அவர் எவ்வாறு தலையிடுகிறார் என்பதெல்லாம் பெண்கள், ஆண்களுக்கு சமமான திறன் கொண்டவர்கள் என்பதைக் காட்டுவதற்கான காலம். ஓர் ஆணால் முதல்வராக இருக்க முடியும் என்றால், ஒரு பெண் ஏன் அடுத்த முதல்வராக இருக்க முடியாது? ஆனால் இது மட்டுமே பெண்ணியம் மற்றும் பெண்களின் இடஒதுக்கீட்டின் சாராம்சம் அல்ல. முதல்வர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமாக பார்க்கக்கூடாது.
மேலும், ஒருவர் மட்டுமே முதல்வராக முடியும். ஒரு குழுவில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருக்கும் அல்லது மற்றவர்களை வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு சூழ்நிலை இருந்தால், அவர் முதல்வராக பதவி வகிப்பார். கேரளாவில், தற்போது எங்களுக்கு பினராயி விஜயன் இருக்கிறார். எனவே, ஒரு பெண் முதல்வரின் கேள்வி பொருந்தாது. தொற்றுநோய் காலங்கள் மற்றும் பிற சவால்களுக்கு மத்தியில் அவர் அரசை வழிநடத்தினார். அவர் தைரியமாக முடிவெடுக்கும் சக்தி கொண்டவர் மற்றும் கேரள மக்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டவர்” என்று பதலளித்திருக்கிறார் ஷைலாஜா டீச்சர்.