பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் ஹிந்துக்களின் முக்கிய வடஇந்தியப் பண்டிகையான கும்பமேளா மற்றும் நான்கு புனித பயணங்கள் (char dham yatra), இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் புனித தலங்களுக்கு பயணம் செய்யும் பக்தர்கள், நான்கு முறை புனித நீராடுவார்கள். இந்த விழாவின் முதல் பகுதியாக கடந்த மார்ச் 11-ம் தேதி சிவராத்திரியன்று பக்தர்கள் ஹரித்வாரில் புனித நீராடினர்.
வருகின்ற ஏப்ரல் 1, 12 மற்றும் 14-ம் தேதிகளில் நடக்கவிருக்கும் கும்பமேளா நிகழ்வுகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வழக்கமாக கடைசி இரண்டு நாள்கள் கூட்டம் அதிகரித்து, கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும். கொரோனா பரவல் முழுமையாகத் தீராத நிலை, மேலும் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் விழாவை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்து உத்தரகண்ட் முதல்வர் டரெத் சிங் ராவத் முக்கிய உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
செவ்வாய் அன்று நடந்த கலந்துரையாடலில் முதல்வர், புனித நிகழ்வுகளின்போது சட்டம், ஒழுங்கை காப்பது மற்றும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசினார்.
“முதல் புனித நீராடல் (ஷாகி ஸ்நான்) நல்லபடியாக நிறைவடைந்தது. இனிவரும் மூன்று நிகழ்வுகளிலும் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். நிகழ்வினை கண்காணிக்க முன் தயாரிப்புகளை விரைவாகச் செய்திட வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மக்களை கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்யவும் அதிகப்படியான காவல்துறையினர் தேவை” என முதல்வர் கூறினார்.
மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காவல்துறையினர் விவகாரத்தில் உதவுவார் எனவும் டரெத் சிங் ராவத் கோரினார்.
கும்பமேளா, புனிதப் பயணங்கள், கொரோனா என அனைத்தையும் கண்காணிக்க அதிக காவல் வாகனங்கள் மற்றும் காவலர்கள் தேவை. மேலும், காவல்துறையினர் நவீனக் கருவிகளை உபயோகிக்க அறிவுறுத்திய முதல்வர், மலை மேல் உள்ள நகரங்களில் சிசிடிவி கருவிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நாள்களில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணம் பக்தர்களுக்கு சிறப்பானதாக அமைய உத்தரகண்ட் அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இன்னொரு பக்கம், உலகின் மிகப்பெரிய ஆன்மிகக் கூடலான கும்பமேளா, ‘சூப்பர் ஸ்ப்ரெடர்(Superspreader)’ நிகழ்வாக மாறிவிடக்கூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.