அதிமுக சார்பாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில், தற்போது அமைச்சர்களாக உள்ள மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படவில்லை. பல முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதிமுகவில் ஏற்கனவே முதற்கட்டமாக 6 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது 171 பேரை உள்ளடக்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இரண்டு பட்டியல்களையும் சேர்த்து மொத்தமாக 177 பேர் அதிமுக சார்பாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது வெளியாகியுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில், தற்போது அமைச்சர்களாக உள்ள நிலோபர் கபில், பாஸ்கரன், எஸ்.வளர்மதி ஆகிய மூவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நத்தம் விஸ்வநாதன், கே.வி.ராமலிங்கம், கே.பி.முனுசாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், தாமோதரன், கு.ப.கிருஷ்ணன், மு.பரஞ்சோதி, இசக்கி சுப்பையா, பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, சின்னய்யா, வைத்திலிங்கம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வைகைச்செல்வன், பா.வளர்மதி, கோகுல இந்திரா போன்ற 16 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களுக்கு பெரும்பாலோனோருக்கு, ஏற்கனவே கடந்தமுறை அவர்கள் போட்டியிட்ட தொகுதியிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கே, இந்த முறையும் அதே தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்கனவே போட்டியிட்ட சிவகாசி தொகுதியிலிருந்து மாறி, தற்போது ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.