இந்தியா என்ன வேண்டுமானாலும் செய்யும் அதனை கேக்க பல் இல்லாத அமைப்பு ஐசிசி என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அகமதாபாதில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் விளையாடும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு அந்த வாய்ப்பு பறிபோனது. மேலும் அகமதாபாத் மைதானம் பிட்ச் சிறப்பானதாக இல்லை இந்தியாவுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து ‘டெய்லி டெலிகிராப்’ ஊடகத்துக்கு பேட்டியளித்த மைக்கல் வாகன் “ஐசிசி அமைப்புக்கு இந்தியா போன்ற பலமான நாடுகளை கேள்வி கேட்க பல் இல்லாமல் இருக்கிறது. இந்தியா எப்படிப்பட்ட பிட்சையும் தயார் செய்யலாம் அது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தை கெடுக்கிறது. ஆனால் இதனை யாரும் தட்டி கேட்க முடியாது”
“போட்டியை நேரலையாக ஒளிபரப்பும் நிறுவனங்கள் பணத்தை திரும்ப கேட்கும். டெஸ்ட் போட்டிகள் முன் கூட்டிய முடிந்துவிடுகிறது. இந்தியா தனக்கு சாதகமான மிகவும் மோசமான பிட்சை தயாரிக்கிறது. இதனால் வீரர்களால் சரியாக விளையாடவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்தியா போட்டியை நெருக்கத்திலேயே வென்று இருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்தப் போட்டியில் வெற்றியாளர் என யாரும் இல்லை” என்றார் வாகன்.
தொடர்ந்து பேசிய அவர் “இந்தியா திறமையை வெளிப்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இங்கிலாந்து அணியை விட திறமை வாய்ந்தவர்கள் என கூறுவதை என்னால் ஏற்க முடியாது. என்னைப் போன்ற முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து இதுபோன்ற மோசமாக தயாரிக்கப்படும் பிட்ச் குறித்து கேள்விகளை எழுப்புவோம்” என பொங்கியுள்ளார் மைக்கல் வாகன்.