கமல்ஹாசன், சரத்குமார் சந்திப்பு!
டெல்லியில் தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை நேற்று அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆகியோர் சென்னை வடபழனியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது தங்கள் கட்சிகள் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் இது தெரிவித்தனர். மேலும் சரத்குமார் பேசுகையில், “மக்கள் சேவை என்ற கொள்கையில் இருக்கும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்ற கருத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமலுடன் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே கூட்டணியில் கமல்ஹாசன் இணைவாரா என்பது இந்த ஆலோசனைகளுக்கு பின்னர் தெரிய வரும் என்கிறார்கள். ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியினருடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடதக்கது.
அ.தி.மு.க பா.ஜ.க பேச்சுவார்த்தை…!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க – பா.ஜா.க இடையே ஆன தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என கூறப்படும் நிலையில், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்கள், அ.தி.மு.க-வுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவாரத்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்கள் சி.டி ரவி, கிஷன் ரெட்டி ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வம் இல்லத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க பா.ஜக இடையே தொகுதி பங்கீட்டில் இன்று சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.