அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் தனது குட்டித் தம்பியை தீ விபத்திலிருந்து காப்பாற்ற முயன்ற 11 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்ஸியைச் சேர்ந்தவர் ஆங்கி ரீட். இவருக்கு டிசையர் என்ற 11 வயது மகளும், 6 வயதில் மகனும், பிறந்து 8 மாதங்களே ஆன கியோன் என்ற கைகுழந்தையும் உள்ளனர். இந்நிலையில், ஆங்கி ரீட் வீட்டில் புதன்கிழமை திடீரென தீப்பற்றியது. வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தீப்பற்றியதால் யாருக்கும் தெரியவில்லை. அப்போது அவரது 6 வயது மகன், தாய் ஆங்கி ரீட்டை எழுப்பி புகை மூட்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
உடனே அலறி அடித்துக்கொண்டு தனது 6 வயது மகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ஆங்கி ரீட், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அங்கே வந்த தீயணைப்பு வீரர்களிடம், `தனது 11வ யது மகள் டிசையர் மற்றும் 8 மாத கைக்குழந்தை கியோன் ஆகியோரை காப்பாற்றும்படி கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறும்போது, “ஆங்கி ரீட் தனது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு, பக்கத்து அறையிலிருக்கும் இரண்டு குழந்தைகளையும் மீட்க சென்றுள்ளார். ஆனால் அந்த அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் அவரால் குழந்தைகளை மீட்க முடியவில்லை” என்றனர்.
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்களால் குழந்தைகள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. சிறுமியை காப்பாற்ற முடியவில்லை என்று கூறிய அதிகாரிகள், இறுதி வரை தனது குட்டித் தம்பியை காப்பாற்ற சிறுமி டிசையர் போராடியிருக்கிறார் என்று தெரிவித்தனர். சிறுமி டிசையரின் பாசமும் தைரியமும் அப்பகுதி மக்களுக்கு அவரை ஹீரோவாக்கி புகழஞ்சலி செலுத்த வைத்திருக்கிறது.
பின்னர் 8 மாத கைக்குழந்தையான கியோன் நியூஜெர்சி நகர மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இது தொடர்பாக அவரது அண்டை வீட்டுக்காரர்களுள் ஒருவரான லாரன்ஸ் ஆண்டர்சன் கூறுகையில், “நான் கற்பனை செய்யக்கூட விரும்பவில்லை. நான் பாடம் கற்றுக்கொடுக்கும் குழந்தைகளின் வயதுதான் அவர்களுக்கும். அவர்களின் இழப்பு என்னை மிகவும் காயப்படுத்துகிறது” என்றார்.
மற்றொரு அண்டை வீட்டாரான பிராந்தி வில்லியம்ஸ், “இந்தச் சம்பவம் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். காயமடைந்த தீயணைப்பு வீரர்கள் மீண்டும் நலம் பெற்று வீடு திரும்ப நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். எங்களுக்கு உதவ முயற்சித்தமைக்கு நன்றி” என கூறினார். தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.