மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கூச்பேஹரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘’மேற்கு வங்கத்தில் ‘பிரதமர் கிசான் சம்மன் நிதி’ மூலம் விவசாயிகள் பயன் பெறுவதை முதல்வர் மம்தா பானா்ஜி தனது ஈகோவினால் தடுத்துவிட்டார். இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதனால் அந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6,000 கிடைப்பது தடுக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதவித் தொகையை இழந்துவிட்டனர்.
எனவே விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ.18,000 வரவு வைக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். கடந்த ஆண்டு நிலுவையில் இருந்த ரூ.6,000, இந்த ஆண்டின் ரூ.6,000 மற்றும் அடுத்த ஆண்டுக்கான ரூ.6,000 என மொத்தமாக ரூ.18,000 உதவித்தொகையை நீங்கள் பெற முடியும்” என்று கூறினார்.