சட்டப்பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை எடுத்துச் சென்றது தொடர்பாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகள் மீது இன்று தீர்ப்பு வழக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடந்த 2017ஆம் ஆண்டு திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றனர். இது பேரவையின் உரிமையை மீறிய செயல் என சபாநாயகர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நோட்டீஸில் அடிப்படை தவறுகள் இருப்பதாகக் கூறி அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தவறுகளை களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு எதிராக ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம் எல் ஏக்களும், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கு. க. செல்வமும் புதிதாக வழக்குகளை தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். இடைக்கால தடையை நீக்கக்கோரி சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் பேரவை உரிமைக் குழுவில் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி டிசம்பர் 4ஆம் தேதி வழக்குகளின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இந்த தீர்ப்பு இன்று காலை 10:30 மணியளவில் வழங்கப்படவுள்ளது.