கொரோனா பெருந்தொற்று நோயின் காரணமாக இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தியபோதே ‘இனி வேலை நேரம் 12 நேரமாக அதிகரிக்கக்கூடும்’ என்ற பேச்சு அங்கும், இங்குமாக ஒலித்து வந்தது. இந்நிலையில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
“தற்போது நடைமுறையில் உள்ளதுபோல வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அது அப்படியே தொடர்கிறது. ஆனால் வேலை நேரத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை என்றால் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும். அதுவே 10 மணி நேரம் வேலை என்றால் வாரத்தில் 5 நாட்களும், 8 மணி நேரம் வேலை என்றால் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்யவேண்டி இருக்கும். இதில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் எந்தவித நிர்பந்தமும் இல்லை. மாறி வரும் பணி தொடர்பான கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இது மூன்று ஷிப்டு வேலையை இரண்டே ஷிப்டாக மாற்றும் வேலை எனவும், இதனால் வேலைவாய்ப்புகள் பறிபோகலாம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.