உத்தராகண்ட்டில் பனிச்சரிவினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட் நிதியுதவி அளிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் என்ற இடத்தின் அருகே நீர் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் திடீரென பனிப்பாறைகள் வெடித்துச் சிதறி, பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் உள்ள தௌலிகங்கா ஆற்றில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அச்சமயம் நீர் மின் திட்ட கட்டுமானப் பணியில் சுமார் 100 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
My sincere condolences and prayers for the families of those affected by the Uttarakhand flash floods. I hope that the rescue operations underway are able to help those in trouble.
— Rishabh Pant (@RishabhPant17) February 7, 2021
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட ரிஷப் பன்ட் “உத்தராகண்ட் வெள்ளத்தில் பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களால் உதவ இயலும் என நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டார்.
Deeply pained by the loss of life in Uttarakhand. Would like to donate my match fee for the rescue efforts and would urge more people to help out.
— Rishabh Pant (@RishabhPant17) February 7, 2021
மேலும் தன்னுடைய மற்றொரு பதிவில் “உத்தராகண்ட் பாதிப்பில் உயிரிழந்தவர்களை நினைத்து வருத்தப்படுகிறேன். நான் என்னுடைய போட்டியில் கிடைக்கும் ஊதியதத்தை மீட்பு பணிகளுக்காக வழங்குகிறேன். பொது மக்களையும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார் ரிஷப் பன்ட்.