பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபி திரிபாதியை சந்தித்து அமைச்சர்கள் மீண்டும் மனு கொடுத்துள்ளனர்
சென்னையில் டிஜிபியை சந்தித்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம் “சிறையிலிருந்து இருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்பவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் தமிழகத்தில் கலவரம் தூண்டும் வகையில் டிடிவி தினகரன், சசிகலா செயல்படுகின்றனர். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என டிஜிபியை சந்தித்து மனு அளித்தோம். டிஜிபி அல்ல முப்படைகளிடம் மனு கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என டிடிவி தினகரன் பேசியுள்ளார்” என்றார்.
மேலும் “உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சசிகலா செயல்படுகிறார். உண்மையான அதிமுக ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் செயல்படுகிறது. அதிமுக கொடியை சசிகலா, டிடிவி தினகரன் பயன்டுத்துவதை தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியிடம் புகாரளித்துள்ளோம்” என்றார் சிவி சண்முகம்.