தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் டவுனில் நிறுவப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை கயிறு இழுத்துச் சென்றுள்ளனர் அடையாளம் தெரியாத திருடர்கள். இந்த திருட்டு செயலை நான்கு பேருக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாக சேர்ந்து செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் நடந்துள்ளது. கொள்ளை போனது எவ்வளவு பணம் என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர் சம்மந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகள்.
“நள்ளிரவு நேரத்தில் டவுனுக்குள் நான்கு பேர் அடங்கிய குழு டவேரா காரில் நோட்டம் விட்டுள்ளனர். முதலில் அவர்கள் நகைக்கடையில் திருடவே திட்டமிட்டுள்ளனர். அந்த பகுதியில் போலீசார் அதிகம் இருந்ததால் வேறு வழியின்றி ஏடிஎம் மையத்தில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஒரே ஒரு கொள்ளையன் மட்டும் ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி விட்டு சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. பின்னர் இயந்திரத்தை ஆள் அரவமற்ற இடத்திற்கு எடுத்து சென்று உடைத்துள்ளனர். பிறகு அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பறந்துள்ளனர். குற்றவாளிகளை தேடும் பணியில் தனிப்படையினர் முடக்கி விடப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார் அதிலாபாத் டி.எஸ்.பி வெங்கடேஸ்வர் ராவ்.
இதே போல கடந்தாண்டு தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.