ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனத்தில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
ஜம்மு காஷ்மீரில் கடுமையான குளிரும் பனியும் நிலவி வருகிறது. இந்நிலையில் நரிகூட் பகுதியில் இருந்து ராணுவத்தினருக்கு உதவி கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டது. கர்ப்பிணி பிரசவ வலியில் துடிப்பதாகவும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் வாகன உதவி தேவை எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக ராணுவ வாகனம் மருத்துவக்குழுவுடன் நரிகூட் பகுதியை சென்றடைந்தது. கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைந்தது ராணுவ வாகனம். ஆனால் கடுமையான வானிலை காரணமாக வாகனத்தை விரைவாக செலுத்த முடியவில்லை.
கர்ப்பிணியின் நிலைமை மோசமானதை அடுத்து சாலை ஓரத்தில் வாகனம் நிறுத்தப்பட்டு ராணுவ மருத்துவக் குழுவினர் பிரசவம் பார்த்தனர். இதில் கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பனி சூழ ராணுவ வாகனத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ராணுவத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளையும், பரிசுகளைம் கொடுத்து வருகின்றனர். அவசர நேரத்தில் துரிதமாக செயல்பட்ட ராணுவத்தினருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.