கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய்
“தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய மூன்று அம்சங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு 64,180 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”
– நிர்மலா சீதாராமன்
சுயசார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம்!
“சுயசார்பு திட்டம் நமக்கு புதியது அல்ல; பழங்காலத்திலிருந்தே இந்தியா சுயசார்பாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்டங்கள் 5 மினி பட்ஜெட்களுக்கு சமமானது. இந்தப் பெருந்தொற்று காலத்திலும் இந்திய பொருளாதாரம் வளர்வதற்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும் இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. சுயசார்பு திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான பல அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் நீங்கள் பார்க்கலாம்.”
– நிர்மலா சீதாராமன்.
“பொதுமுடக்கத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால், கொரோனா பெருந்தொற்றினால் இந்தியா பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கும். இந்திய மக்கள் கொரோனா பயத்திலிருந்து விரைந்து வெளியில் வர வேண்டும் என்பதற்காக தற்போது கொரோனாவுக்கு எதிராக இந்தியா இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டுவந்துள்ளது.”
– நிர்மலா சீதாராமன்
பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட்டிற்கு கேபினட் குழு ஒப்புதல்
மத்திய பட்ஜெட் 2021-க்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
இந்த 3 விஷயங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
“- மத்திய பட்ஜெட் 2021 ஆனது சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் இருக்கவேண்டும்.
– பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்.
– நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு பாதுகாப்பு துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.” என ராகுல் காந்தி ட்வீட்.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் சந்திப்பு.
நாடாளுமன்றம் புறப்பட்டார் நிதியமைச்சர்
பட்ஜெட் ஆவணங்களுடன் நிதியமைச்சகத்திலிருந்து புறப்பட்டார் நிர்மலா சீதாராமன். பேப்பர்லெஸ் பட்ஜெட் என்பதால் காகித ஆவணங்களுக்குப் பதில் `டேப்லெட்’டில் இன்று தாக்கல் செய்கிறார்.
11 மணிக்கு தாக்கலாகும் மத்திய பட்ஜெட் 2021
கோவிட் 19 பெருந்தொற்றால் நாட்டின் நிதிநிலைமை மோசமான நிலையில் இருக்கும் சூழலில் இன்று மத்திய பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சராக இவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இது.
கோவிட்-19 காரணமாக பெரும்பாலான தொழில்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. எனவே தொழில்துறைக்கு கைகொடுக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் முக்கிய சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக பேப்பர்லெஸ் பட்ஜெட்டாகவும் இந்த பட்ஜெட் அமைகிறது. இதையடுத்து பட்ஜெட் ஆவணங்களை மக்கள் படிப்பதற்கு ஏதுவாக `Union Budget‘ என்னும் செயலியையும் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
Also Read: Union Budget 2021: பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு… நம்பிக்கை கொடுத்த நிர்மலா சீதாராமன்!
கொரோனா பெருந்தொற்று காரணமாக, மத்திய அரசுக்கு செலவினங்கள் அதிகரித்துள்ளதால், வருகிற 2021-2022-ம் நிதி ஆண்டில் வரி வருவாயை அதிகரிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதனால், இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Also Read: Union Budget 2021: இந்த ஆண்டு பேப்பர்லெஸ் பட்ஜெட்… அறிமுகமானது புதிய மொபைல் ஆப்
அதிகரிக்கும் செலவுகளை சமாளிக்க அதிக வருவாய் பிரிவினருக்கு `கோவிட் செஸ்’ என்ற பெயரில் கூடுதல் வரி விதிப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுகாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி ஆகிய துறைகளுக்கு இம்முறை அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: `பட்ஜெட் அறிவிப்புகள் மக்களுக்கு உரிய பயன்தராமல் போவது ஏன்?’ – விளக்கும் நிதி ஆலோசகர் சிவக்குமார்