விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய காம்பீர் “கோலியின் டி20 கேப்டன்சி குறித்துதான் நான் சந்தேகமும் கேள்வியும் எழுப்பியிருக்கிறேன். ஆனால் அவருடைய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சி குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் தலைமையிலான இந்திய அணி நிச்சயம் மேலும் மெருகுப்பெரும்” என்றார்.
மேலும் “இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஒருவர், இருவரை நம்பி இல்லை. இப்போதுள்ள அணி கோலிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். அவர் ஏற்கெனவே டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இப்போது கோலி புத்தம் புதிதாக தன்னை உணர்ந்திருப்பார். இங்கிலாந்துடனான போட்டியில் மகிழ்ச்சியுடன் மீண்டும் விளையாட வருவார்” என்றார் காம்பீர்.
தொடர்ந்து பேசிய காம்பீர், “ஒவ்வொரு மனிதனுக்கும் குழந்தை பிறப்பு என்பது மகிழ்ச்சியை தரக்கூடியது. அதனை கோலி இப்போது அனுபவித்துவிட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு திரும்ப இருக்கிறார். கிரிக்கெட்டில் சதமடிப்பது முக்கியமல்ல, அணி வெற்றிப்பெறுவதே முக்கியம். ஆஸ்திரேலியாவில் கோலி பேட் செய்யவில்லை என்பது முக்கியமல்ல, இங்கிலாந்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இந்தியாவை தகுதி பெற வைப்பதே கோலியின் இலக்காக இருக்கும்” என்றார்.