பொள்ளாச்சியில் அதிர்ஷ்ட கற்கள் இருப்பதாக கூறியும் பழைய செல்லாத 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படும் எனக் கூறியும் சதுரங்க வேட்டை சினிமா பாணியில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ரியாஸ். இவரது நண்பர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த மூக்கையன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த அப்பாஸ் ஆகியோர், தங்களுக்கு தெரிந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிர்ஷ்ட கற்கள் உள்ளது எனவும், ஏராளமான பழைய செல்லாத 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் உள்ளது எனவும், இவற்றை பெற்றுக்கொண்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அதிர்ஷ்ட கற்களை வாங்குவதற்கு முன்பணமாக ரூபாய் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு பொள்ளாச்சி அருகே உள்ள சிங்கநல்லூர் பகுதிக்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகமடைந்த ரியாஸ், போலீசுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, ஒரு பையில் காகிதங்களை வைத்துக்கொண்டு, அதிர்ஷ்ட கற்களை வாங்குவதற்காக, சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த கேரளாவை சேர்ந்த 2 பேர் மற்றும் ரியாஸின் நண்பர்கள் 3 பேர் உள்பட 5 பேரை பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 5 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்த மோசடிக் கும்பல் போலி அதிர்ஷ்ட கற்கள், போலி தங்கக் கட்டிகள் மற்றும் பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு, பணம் படைத்தவர்களை நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்யும் நபர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மோசடி கும்பலை சேர்ந்த 5 பேர் கொடுத்த தகவலின்பேரில், பொள்ளாச்சியில் பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 17 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோசடி கும்பலை சேர்ந்த 22 பேரிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் போலி அதிர்ஷ்ட கற்கள், இருடியம், போலி தங்கக்கட்டிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாகவும், இது போன்ற அதிர்ஷ்ட கற்களை வீட்டில் வைத்து இருந்தால், குடும்பத்தில் செல்வச் செழிப்பு குவியும் என்றும் வாட்ஸ்-ஆப் மூலமாக பரப்பி, பணம் படைத்தவர்களை நம்ப வைத்து, ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 22 நபர்கள் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீசார், சிறையில் அடைத்தனர். இரு மாநிலங்களிலும் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் பொள்ளாச்சியில் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மோசடி கும்பலுக்கு ஹவாலா பண பரிவர்த்தனை உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.