போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய மத்திய அரசு அவர்களை தாக்குகிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் அழித்து வருகிறது. அரசாங்கம் விவசாயிகளுடன் பேச வேண்டும் மற்றும் ஒரு தீர்வுக்கு வர வேண்டும். இதற்கு ஒரே தீர்வு சட்டங்களை ரத்து செய்து அவற்றை குப்பைக்கூடையில் வீசுவதுதான். விவசாயிகளுடன் பேசுவதற்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கும் பதிலாக அரசாங்கம் அவர்களை அச்சுறுத்துகிறது, அவர்களை இழிவுபடுத்துகிறது” என்று கூறினார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல்காந்தி ” எப்படியாவது விவசாயிகள் வீட்டிற்கு செல்வார்கள் என்று அரசாங்கம் நினைக்கக்கூடாது. கிளர்ச்சி பரவும் என்பது எனது கவலை. ஆனால், எங்களுக்கு அது தேவையில்லை, எங்களுக்கு இதற்கு தீர்வுதான் தேவை” என்றும் கூறினார்.
செங்கோட்டையில் குடியரசு தினத்தில் ஏற்பட்ட கலவரம் பற்றி கேட்டபோது, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் நோக்கம், வேளாண் சட்ட எதிர்ப்பாளர்களை செங்கோட்டையில் “அனுமதிப்பது” மற்றும் அவர்களை அங்கே கலவரத்தை உருவாக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதானா என்று கேள்வி எழுப்பினார். மேலும் “செங்கோட்டையில் மக்கள் ஏன் அனுமதிக்கப்பட்டார்கள்? அவர்கள் ஏன் காவல்துறை தடுத்து நிறுத்தவில்லை? உள்துறை அமைச்சரிடம் அவர்களை செங்கோட்டை வளாகத்திற்குள் அனுமதித்ததன் நோக்கம் என்ன என்று கேளுங்கள்” என்றும் அவர் கூறினார்.