மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்படுவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஆர்வமிகுதியில் கொரோனா அச்சமின்றி, வழக்கமாக பொது இடங்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதை கள நிலவரம் காட்டுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் இந்த நினைவிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி அடிக்கல் நாட்டி சுமார் 3 ஆண்டுகள் நடந்து வந்த பணிகள் முடிந்த நிலையில் இந்த நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ளது.
80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தை காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.