இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா, ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சென்னை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன் பின்பு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் பிப்ரவரி 5 – 9 ஆம் தேதி வரையிலும், இரண்டாவதுப் போட்டி பிப்ரவரி 13 – 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக ரோகித் சர்மா, ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். இவர்கள் மூவரும் ஒன்றாக சென்னை வந்துள்ளனர். இவர்கள் 6 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதில் முக்கியமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் டெஸ்ட் தொடரை முடித்த இங்கிலாந்து அணியினரும் இன்று சென்னை வந்தடைந்து, கொரோனா தடுப்பு விதியின் கீழ் 6 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒரு சில வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக சென்னை வருகிறார்கள்.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது “இரு அணி வீரர்களும் சென்னையின் ஹோட்டல் லீலா பேலஸில் தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்கள் அங்கு 6 நாள்களை தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்பு இரு அணியும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்குவார்கள்” என்றார்.