கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்திய பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ‘மத்திய பட்ஜெட் 2021’ வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு வருடமும் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். ஒவ்வோர் ஆண்டிலும் பல்வேறு துறைகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும், இந்த ஆண்டு ஹெல்த்கேர் துறைக்கான ஒதுக்கீடு அதிகம் வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பும். ஏனெனில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் கொரோனாவை எதிர்த்துப் போராடிவரும் ஹெல்த்கேர் துறையினர், பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
Also Read: சென்னை: கொரோனா தடுப்பூசி முகாம்! – ஒரு ஸ்பாட் விசிட்
உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் தேவைப்படுவதால், அதை மேம்படுத்தும் நோக்கில் அதிக நிதியை ஹெல்த்கேர் துறைக்கு ஒதுக்கவேண்டும். ஏனெனில், இந்தியா தனது ஜி.டி.பி விகிதத்தில் 3% அளவுக்கு மட்டுமே ஹெல்த்கேர் துறைக்குச் செலவிடுகிறது. இதே சர்வதேச நாடுகள் பல தங்களது ஜி.டி.பி விகிதத்தில் 8% அளவுக்கு ஹெல்த்கேர் துறைக்காகச் செலவிடுகின்றன. ஆக வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2021-ல் அரசு ஹெல்த்கேர் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டியது மிக அவசியம் என்கின்றனர் துறை சார்ந்த நிபுணர்கள்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஹெல்த்கேர் துறைக்கு மொத்த ஒதுக்கீடு 67,484 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலவினங்களை அரசு ஏற்றுள்ளதால், அதற்கான நிதி ஒதுக்கீடும் ஹெல்த்கேர் துறை சார்ந்தே இருக்கும். இதற்கான செலவே பெரும் பங்கு இருக்கும்போது, உள்கட்டமைப்பு போன்ற தேவைகளுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட இன்னும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.