தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாகவும் அரசுக்கு எதிராக மக்களை போராட தூண்டும் வகையில் நடந்து கொள்வதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி கடந்த ஆகஸ்ட் மாதம் திடீர் சுகவீனம் அடைந்தார். நவல்னியை கொல்ல உணவில் ரஷ்ய அரசு விஷம் வைத்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இச்சூழலில் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்த நவல்னி கடந்த வாரம் ரஷ்யா திரும்பினார். நவல்னி மீதுள்ள பழைய வழக்குகளுக்காக அவரை கைது செய்து ரஷ்ய அரசு சிறையில் அடைத்தது. ரஷ்யாவில் கைதாகியுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னியை விடுவிக்க கோரி அந்நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

image

இந்நிலையில் ரஷ்ய மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதையும் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தவதற்கும் அமெரிக்கா ஆதரவாக இருப்பதாக அந்நாட்டு தூதர் ரெபெக்கா ரோஸ் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

image

இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக் கோரி ரஷ்யாவின் பல பகுதிகளில் வெடித்துள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சுமார் 3,500 பேரை ரஷ்ய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். போராட்டங்களில் பங்கேற்பவர்கள் கைது செய்யப்பட்டு காலவரம்பின்றி சிறையில் அடைக்கப்படுவார்கள் என ரஷ்ய காவல் துறை எச்சரித்துள்ளது. புட்டினை பலவீனப்படுத்த அமெரிக்கா அரங்கேற்றும் முயற்சியின் ஒரு அங்கம்தான் அலெக்சி நவல்னி என ரஷ்ய அரசு கூறி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.