மத்திய பட்ஜெட்டுக்கான ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை குறிக்கும் வகையில், பட்ஜெட் தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக நிதி அமைச்சக அதிகாரிகள் அனைவருக்கும் நிதி அமைச்சர் அல்வா தயாரித்து கொடுப்பது வழக்கம். இந்த மரபு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடாளுமன்றத்தில் 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை நிகழ்த்தவிருக்கிறார். இதற்கான பணி நேற்று துவங்கியது. அனைத்து அதிகாரிகளுக்கும் இனிப்பு கொடுத்துவிட்டு, ‘யூனியன் பட்ஜெட் ஆப்’ ஒன்றை நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
வழக்கமாக பட்ஜெட் குறித்த விவரங்களை பேப்பர்களில் அச்சிட்டு, அதை ‘சூட்கேஸ்’ பெட்டியில் வைத்து எடுத்துவருவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டுக்கு முந்தைய வருடம் பெட்டி கலாசாரத்தை மாற்றி, ஆவணங்களை முதன்முதலாக துணிகளில் சுற்றி எடுத்துவரும் பழக்கத்தைக் கடைப்பிடித்தார் நிர்மலா சீதாராமன்.
நடப்பு ஆண்டில், அதை முற்றிலுமாக மாற்றி ‘பேப்பர்லெஸ் பட்ஜெட்’ என்கிற புதிய விஷயத்தை அறிமுகம் செய்யவிருக்கிறார். அதாவது, தற்போது அறிமுகம் செய்திருக்கும் ‘யூனியன் பட்ஜெட் ஆப்ஸ்’ மூலம் மொபைலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் பட்ஜெட் ஆவணங்களை பார்க்கலாம்.
Also Read: பட்ஜெட் 2021 வரிச் சலுகை
எதிர்பார்ப்புகள்..! முதலீடு முதல் காப்பீடு வரை…
இந்த மொபைல் ஆப்பை தேசிய தகவலியல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இதை டவுன்லோட் செய்யலாம். ஆண்ட்ராய்ட் போன், ஐபோன், ஐபேட் ஆகியவற்றில் இந்த ஆப்பை பயன்படுத்தலாம்.
இந்த மொபைல் பயன்பாட்டில் அனைத்து பட்ஜெட் ஆவணங்களும் இருக்கும். ஆண்டு இறுதி நிதி அறிக்கை (Annual Financial Statement), மானியங்களுக்கான தேவை (Demand for Grants), நிதி மசோதா போன்ற தகவல்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இருக்கும். இந்த மொபைல் பயன்பாட்டை யூனியன் பட்ஜெட் வலை இணையதளமான www.indiabudget.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வருகிற 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் 20201-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்ததும் முழு பட்ஜெட்டும் இந்த ஆப்ஸில் மக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும்.
டிஜிட்டல் இந்தியாவாக மாறிவரும் இந்த நேரத்தில், டிஜிட்டல் பட்ஜெட்டை அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.