புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரியில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நமச்சிவாயம் முதலமைச்சராக முன் நிறுத்தப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் பெரும்பான்மையான இடங்களை வென்ற நிலையில், தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி திடீரென முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனால் நமச்சிவாயம் ஏமாற்றமடைந்து மனவேதனையில் இருந்ததாக கூறப்பட்டது.
இருப்பினும் அவருக்கு இரண்டாவது இடம் அமைச்சரவையில் வழங்கி அக்கட்சி மேலிடம் சமாதானம் செய்தது. அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்த நமச்சிவாயம் கடந்தாண்டு தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் மேலும் அதிருப்தியில் இருந்த நமச்சிவாயம் சமீபகாலமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகிய நிலையில், தனது வில்லியனூர் தொகுதி நிர்வாகிள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இருவேறு இடங்களில் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நாளை மறுநாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை நமச்சிவாயம் ராஜினாமா செய்வார் என்றும் டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைவார் எனவும் கூறப்படுகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டார் வருகிற 31 ஆம் தேதி புதுச்சேரி வரும் நிலையில், நமச்சிவாயம் காங்கிரஸிருந்து வெளியேறப் போவதாக வரும் தகவல் புதுச்சேரி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நமச்சிவாயம் பாஜகவில் இணையும் செய்தியை மறுத்தார்.