ஆஸ்திரேலியாவில் அண்மையில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களம் இறங்கி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடியவர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். ஆல் ரவுண்டரான அவர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தினார். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அது ஒரு வரம் என தெரிவித்துள்ளார் அவர்.
“டெஸ்ட் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் என்னை பொறுத்தவரை அது ஒரு வரம். எங்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கிரிக்கெட் விளையாடிய காலங்களில் சவாலை மிகவும் ஆவலுடன் எதிர்கொண்டு விளையாடுவார். நானும் அவரைபோலதான் என கருதுகிறேன். எப்படி அவர் பந்து வீச்சாளராக அணிக்குள் களம் இறங்கி அணியின் தொடக்க ஆட்டக்காரராக மாறிய வெற்றிக் கதையை எங்களிடம் சொல்வார். அதை எனக்கான உத்வேகமாக நான் எடுத்துக் கொண்டேன்.
ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பேஸ் மற்றும் பவுன்ஸ் இருக்கும். அதனால் அங்கு விக்கெட் எடுக்க பவுலிங்கில் சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன். பிரிஸ்பேன் ஆடுகளத்தில் நாங்கள் விளையாடியபோது முதல் நாளன்று சுழற்பந்து வீச்சுக்கு பெரிதும் ஆடுகளம் கைகொடுக்கவில்லை. இருந்தாலும் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி” என வாஷிங்கடன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். இந்த இரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.