வரும் 26-ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் நம் பக்கத்து நாடான வங்கதேச ராணுவ படையும் பங்கேற்க உள்ளது. முதல் முறையாக வங்கதேச ராணுவம் இந்த அணிவகுப்பில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் நாட்டின் விடுதலைக்காக இந்திய ராணுவத்தினர் அவர்களது உயிரை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவில் நாங்கள் பங்கேற்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கு வந்துள்ள வங்கதேச ராணுவ படையின் தலைமை அதிகாரியும், கலோனலுமான மொஹ்தாஷிம் ஹைதர் சவுத்ரி.
சுமார் 122 வங்கதேச ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். “இந்த அணிவகுப்பில் நாங்கள் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். இந்தியா எங்கள் நண்பன். அதே நேரத்தில் எங்கள் தேச தந்தை முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டமும், வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் ஆகியுள்ள இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்வது மன நிறைவை கொடுக்கிறது. இரண்டு பிரிவுகளாக இதில் பங்கேற்க உள்ளனர் எங்கள் வீரர்கள். ஒரு குழு அணிவகுப்பிலும், மற்றொரு குழு பேண்ட் குழுவிலும் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2016-இல் பிரான்ஸ் நாட்டு ராணுவமும், 2017-இல் அமீரகத்தின் ராணுவமும் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளன.