இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் இறந்த மேசியான் உடலை அடக்கம் செய்வதில் போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் தேதி நெடுந்தீவு என்ற இடத்தில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்பு உயிரிழந்த நான்கு உடல்களும் இலங்கை கடற்படை கப்பலில் கொண்டுவரப்பட்டு சர்வதேச கடரோர காவல்படையினரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கோட்டை பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டன. அங்கு மரியாதை செலுத்திய பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் மேசியான் உடலை அடக்கம் செய்வதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல உறவினர்கள் கோரிய நிலையில் காவல் துறையினர் கல்லறைக்கு எடுத்துச் சென்றதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேசியானின் உடலை பெற்று அஞ்சலி செலுத்திய பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்ல உறவினர்களும் மீனவ அமைப்பினரும் காத்திருந்தனர். அப்போது மேசியான் உடலை கொண்டுவந்த காவல் துறையினர், கூட்டம் அதிகமாக இருப்பதை அறிந்து உடலை நேரடியாக கல்லறைக்கு கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தங்கச்சிமடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு மேசியானின் உடலை உறவினர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டுவந்தனர். ஆம்புலன்ஸில் இருக்கும் உடலை இறக்கி நாங்கள் எங்கள் கையால் தூக்கிச் செல்வோம் என கூறினர். ஆனால் பதற்றமான சூழல் இருப்பதால் போலீசார் அனுமதிக்க மறுத்தனர்.
ஒருசாரார் ஆம்புலன்ஸ் பின்புறமாக செல்ல மற்றொரு சாரார் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது.