தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொகுதி பங்கீடு குறித்தும், புதிதாக கூட்டணியில் அரசியல் கட்சிகள் இணையுமா என்பது குறித்தும் புதிய தலைமுறைக்கு சிறப்புப் பேட்டியளித்தார். அதில், ”நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். எங்கள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறோம். மாற்றங்கள் முடிந்ததும் தேர்தல் பணிகளை தொடருவோம். தொகுதி பங்கீடு குறித்து திமுகதான் முடிவெடுக்கும். உதயசூரியனில் போட்டியிடும்படி திமுக வெளிப்படையாக சொல்லவில்லை. சுயேச்சை சின்னத்தால் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கலாம். திமுக தரப்பில் நியாயம் இருக்கிறது. அதேபோல், சின்னம் தொடர்பாக முடிவெடுக்கும் சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறது. விசிகவின் தனித்தன்மை பாதிக்கப்படாத வகையில் முடிவெடுப்போம். தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். பாமக, பாஜக இடம்பெறும் அணியில் சேரமாட்டோம்” என்றார் திருமாவளவன்.