கொரோனா தடுப்பூசி மருந்தனா கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவன அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்து இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகித்து வருகிறது. புனேவை மையமாகக் கொண்ட இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
சீரம் நிறுவனத்தின் முதலாம் முனையத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தீவிபத்தால் அந்த பகுதியே கருமண்டலமாக காட்சியளிக்கக்கூடிய நிலையில், தீயணைப்பு பணியினர் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களைக் கொண்டுவந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக தீவிபத்து ஏற்பட்டுள்ள இடம், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் இடம் இல்லை எனவும், தடுப்பூசிகள் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு கிடங்குகள் பத்திரமாக உள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதனால் தீவிபத்து ஏற்பட்டது என்றும், உயிர்ச்சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் கண்டறியும் முயற்சி நடந்துகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.