டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார்
டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது. தமிழகத்திற்கான அரசுத் திட்டங்கள் குறித்து பேசும் முதல்வர், சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்தும் பேசுவார் எனத் தெரிகிறது.
முன்னதாக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் இருந்தார். சுமார் ஒன்றே கால் மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் தமிழகத்தில் பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், கொரோனா தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்தும் அமித் ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.