ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை இரண்டு பெண் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், இன்று காலை இரண்டு பெண் உச்சநீதிமன்ற நீதிபதிகளை துப்பாக்கி ஏந்தியவர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்கள் நீதிமன்ற வாகனத்தில் தங்கள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் அஹ்மத் பாஹிம் கவீம் தெரிவித்தார். நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகளில் இவர்களும் அடங்குவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
சமீபத்திய மாதங்களில் ஆப்கானிஸ்தான் முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது, குறிப்பாக காபூலில், உயர்மட்ட நபர்களைக் குறிவைத்து கொலை செய்யும் ஒரு புதிய போக்கு, நகரத்தில் அச்சத்தையும் குழப்பத்தையும் விதைத்துள்ளது. பென்டகன், ஆப்கானிஸ்தானில் துருப்புக்களின் அளவை 2,500 ஆகக் குறைத்துள்ளதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், சமீபத்திய தாக்குதல் நடந்துள்ளது.