அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் உள்ளது – யார் எதிர்த்து நின்றாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் இருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.
கோவில்பட்டி அருகே தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் “ துக்ளக் ஆண்டுவிழாவில் சசிகலா, அதிமுக இணைய வேண்டும் என்று குருமூர்த்தி பேசியது , அவருடைய(குருமூர்த்தி) கருத்து, அவர் ஆலோசனை கூறுவார், துக்ளக் ஆண்டுவிழாவிற்கு அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது, யார் எதிர்த்து நின்றாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் இருக்கிறது.
எளிய முதல்வராக, சமானிய மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட திட்ட நடவடிக்கைகளால் அதிமுக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. குடிமரமாத்து பணிகள், அம்மா மினி கிளினிக், அம்மா நகரும் ரேசன் கடை போன்ற திட்டங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது” என்றார்
தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்து பதிலளித்த கடம்பூர் ராஜூ “மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கொடுத்த 2 ஜிபி டேட்டாவை கூட மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார்,மக்கள் டாட்டா காட்டுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் ஏளனம் செய்கிறார். மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5.சதவீத ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வரலாறு படைத்துள்ளது.
அதிமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து இல்லை, மாமூல் வசூல் இல்லை, நில அபகரிப்பு இல்லை, ரவுடிசம் இல்லை, தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை, இதையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சியையும் மக்கள் பின்னோக்கி பார்க்கிறார்கள், மக்களுக்கு மறதி இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு இருந்தது. மதுரையில் ஒரு முதல்வர், சென்னையில் ஒரு முதல்வர், கோவையில் ஒரு முதல்வர் என திமுகவினர் அதிகார பகிர்வுடன் குடும்ப ஆட்சி நடத்தினார்கள். மக்களின் சொத்து மக்களிடம் தான் இருக்க வேண்டும், இவற்றை அபகரிக்கும் நிலைமை திமுக ஆட்சியில் இருந்தது
திமுக கிராம சபை கூட்டம் நடத்தியது போன்று அதிமுக கிராமம் தோறும் சென்று திமுக கடந்த கால ஆட்சியில் நடத்தவற்றைகளை மக்களிடம் எடுத்து சென்று திமுகவை விரட்டி அடிப்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு பிரச்சாரம் மேற்கொள்வோம். அதிமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 ஆயிரம் கோடி கூட்டுறவு கடனை ஒரே ஒரு கையெழுத்தில் தள்ளுபடி செய்தார், திமுக சொல்வார்கள் ஆனால் செய்யமாட்டர்கள். 2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் தரப்படும் என்று திமுக கூறியது. எந்த ஊரில் கொடுத்துள்ளனர்;. ஒருவருக்கு கூட தரவில்லை
மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும் கலை திமுகவிற்கு கைவந்தது, திமுக நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதி நம்பி 5பவுன் நகைகடன் வைத்த மக்கள் திருப்ப முடியமால் தவித்து வருகின்றனர். மக்களை ஏமாற்றும் செயலை ஒருமுறை செய்ய முடியும், ஆனால் தொடர்ந்து மக்கள் ஏமாறமாட்டர்கள். திமுகவின் கபட நாடகம், பொய் பிரச்சாரம் இனி எடுபடாது.முதல் கையெழுத்து மட்டுமல்ல, இனி மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு கையெழுத்து போட உள்ளே வரமுடியாது” என்றார்.