இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் என நீண்ட தொடர் இது. இந்த தொடரின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் காயமடைந்து, போட்டியிலிருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலர் காயமடைந்து வருகின்றனர். அதனால் வரும் வெள்ளி அன்று ஆரம்பமாக உள்ள பிரிஸ்பேன் டெஸ்டில் ஃபிட்டான இந்திய அணியை தேர்வு செய்வதே சவாலான காரியமாக உள்ளது.
இந்நிலையில், இதற்கெல்லாம் காரணம் 2020இல் நடைபெற்ற ஐபிஎல் தொடர் கூட காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.
“ஐபிஎல் எனக்கு பிடித்தமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று. அதை இளம் வீரர்கள் கிரிக்கெட்டில் தங்களை மெருகேற்றிக் கொள்ள உதவும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளோடு நான் ஒப்பிட்டு பார்க்கிறேன். குறிப்பாக ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்டில் ஐபிஎல் வேற லெவல். அதே நேரத்தில் கொரோனா தொற்றினால் சர்வதேச கிரிக்கெட் தொடர் முடக்கியிருந்த சூழலில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது சரியான நேரம் இல்லையோ என யோசிக்க தூண்டுகிறது. தொடர்ச்சியாக இந்த சீசனில் வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு ஐபிஎல் காரணமாக இருக்குமோ எனவும் யோசிக்க தூண்டுகிறது. இதை நாம் பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக ரோகித் ஷர்மா ஒருநாள், டி20 மற்றும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை மிஸ் செய்தார். இஷாந்த் ஷர்மா, ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், ஜடேஜா, விஹாரி, பும்ரா, அஷ்வின் என இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் வார்னர், ஸ்டாய்னிஸ் மற்றும் ஃபின்ச் மாதிரியான வீரர்களும் காயம் அடைந்திருந்தனர். இவர்கள் எல்லோரும் ஐபிஎல் தொடரில் விளையாடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.