புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 3-வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர். போராட்டத்தில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர் கொட்டும் மழையிலும் சாலையில் படுத்து தூங்கினர்.
ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகவும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேற்று முன் தினம் காலையில் அண்ணாசிலை அருகே தர்ணாப் போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக நீட்டித்தப் போராட்டம் இரவிலும் நீடித்தது.
கொட்டும் மழையிலும் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சாலையில் படுத்து உறங்கினர். காங்கிரஸின் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று 3ம் நாளாக காங்கிரசாரின் போராட்டம் தொடர்கிறது. சுமார் 300க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.