சசிகலா சிறையில் இருந்து விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், ‘சசிகலா வரட்டும் பார்க்கலாம்’ என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகையில் நடைபெற்றது. தொழிலாளர் நல அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், மூன்றாவது முறையாக அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று கூறினார். பாஜக அதிமுக கூட்டணியால் அதிமுகவிற்கு பின்னடைவு இருக்காதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பாஜக கூட்டணி இருந்தால் அதிமுக தோற்கும் என்ற கருத்து முற்றிலும் முரணானது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று கூறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், சட்டமன்றத் தேர்தல் என்று வரும்போது மக்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
மேலும், சட்டமன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு என்று கூறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா விடுதலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வரட்டும் பார்க்கலாம்” என்று பதிலளித்து அங்கிருந்து சென்றார்.