‘அரசு இடத்தில் இருந்ததால் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது, நினைவுத்தூணை மீண்டும் கட்ட முடியாது. இதை சட்டரீதியாக சந்திக்கத் தயார்’ என பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா புதிய தலைமுறைக்கு விளக்கமளித்துள்ளார்.

ராஜபக்சே சகோதரர்கள் அரசின் உத்தரவால், 2019ல் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். ராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நினைவிடம் தகர்க்கப்படுவதை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளானார்.

பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி, சிறப்பு அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இலங்கை அரசின் நடவடிக்கைக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. எனினும் எதற்கும் செவிசாய்க்காத இலங்கை அரசு, நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் காலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

image

இந்நிலையில், இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா பேசியபோது, ’’இலங்கையில் அரசு இடத்தில் இருந்ததால் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை; இந்த விவகாரத்தை சட்டரீதியாக சந்திக்க தயார்.

அரசின் அறிவுறுத்தலையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் நிறுவப்பட்டதால், அரசும், பல்கலைக்கழகமும் இணைந்துதான் அதை அகற்றின. மேலும் இந்த தூண் அகற்றத்தை எதிர்த்து காலையில் மாணவர்கள் நடத்திய போராட்டங்களும் தற்போது முடிந்துவிட்டன. மீண்டும் கட்டவேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் நினைவுத்தூணை மீண்டும் கட்டமுடியாது’’ என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்..

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.