கைகளை சுத்தம் செய்தல், இருகரம் கூப்பி வணங்குதல் போன்ற இந்திய பாரம்பரிய முறைகளை கொரோனா நமக்கு மீட்டு தந்திருப்பதாக மத்திய வடகிழக்கு மாகாணங்கள் வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் ‘உயிரை அறியும் விஞ்ஞானம் – உடல்நலத்திற்கு தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் உடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
“சுகாதாரத்திற்கு நாட்டின் முதன்மை உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும், சமூக இடைவெளி, சுகாதாரம், தூய்மை, யோகா, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்தும் உலகளவில் பெருந்தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தும் யோகா, ஆயுர்வேதம் போன்ற முறைகளில் முன்னெப்போதையும்விட மக்களிடையே அதிக நம்பிக்கை தற்போது ஏற்பட்டிருக்கிறது.
பொது முடக்கக் காலத்தில் ஏராளமான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல் தனிமை, கவலையைப் போக்குவதற்காகவும் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். கோவிட் நோய் தொற்றுக்குப் பிந்தைய காலத்திலும் இதனை அவர்கள் தொடர்வார்கள்” என்றார் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.
இந்த நிகழ்ச்சியில் ஜகி வாசுதேவ் பேசும்போது, “கடுமையான நம்பிக்கை முறைகளைப் பின்பற்றாத நாடாக இந்தியா எப்போதும் திகழ்கிறது. பலத்தால் வெற்றி பெறும் கலாசாரம் இந்தியாவில் எப்போதும் இல்லை. எனினும், தேடுதலுக்கான பகுதியாக இந்தியா எப்போதும் விளங்குகிறது. நமது குடியரசு தழைப்பதற்கு நாம் இதனைத் தொடர்ந்து பேணி காக்க வேண்டும்” என்றார்.