நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதிமுதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம்முதல் இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது படிப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வந்தன. பல்வேறு நிறுவனங்களில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிலும் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், தடுப்பூசி எப்போதிலிருந்து போடப்படும் என்ற தேதியை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
வரும் ஜனவரி 16ஆம் தேதிமுதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று தற்போது அறிவித்திருக்கிறது. அதன்படி, முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளது. அவர்களுக்குப் பிறகு 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறது. முன்கள பணியாளர்கள் தவிர 23 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் கூறியிருக்கிறது.
முன்னதாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்கான ஒத்திகைகள் இரண்டு முறை நடைபெற்றது. அதன்பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் இதுகுறித்து கலந்தாலோசித்தார். மேலும் தடுப்பூசி விநியோகம் குறித்து மாநில செயலாளர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. வருகிற 11ஆம் தேதி பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் தடுப்பூசி விநியோகம் குறித்து ஆலோசிக்கவுள்ள நிலையில், தடுப்பூசி போடுவதற்கான தேதியையும் அறிவித்திருக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் விமானங்கள் மற்றும் ரயில்களில் கொண்டு செல்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசிகளை சேமித்துவைப்பதற்காக குளிரூட்டப்பட்ட கிடங்குகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துப்பகுதிகளிலும் தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல பேருந்துகள் மற்றும் கண்டெய்னர்களும் ஆயத்தப்படுத்தப் பட்டிருக்கிறது.