டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்க உத்தரவிட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
டெல்லி துணை முதல்வரும், கலை, கலாசார மொழித்துறையின் அமைச்சருமான மணிஷ் சிஷோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் “டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில், தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாடமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.
தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள். தமிழக மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மக்களின் கலாசாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அகாடமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானம் வழங்கி கவுரவிக்கப்படும். தமிழ் மக்களின் கலாசாரத்தை போற்றும் வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும், தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
I am pleased to hear about the Government of Delhi setting up the Tamil Academy.
This will help to develop cross-cultural linkages and showcase Tamil heritage.
On behalf of the DMK, I extend my congratulations & best wishes to @ArvindKejriwal and @msisodia for this initiative. https://t.co/HgPAQNxLDW
— M.K.Stalin (@mkstalin) January 4, 2021
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “கலாசார இணைப்புகளை வளர்க்கவும் தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் தமிழ் அகாடமி உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.