கேரளாவில் சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் ஜனவரி 5ம் தேதி முதல் திறக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்ட கேரளாவில், மத்திய அரசு அறிவிப்பிற்கு முன்னமே மார்ச் மூன்றாவது வாரத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் சினிமா திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து வந்த தளர்வுகளின் அடிப்படையில் திரையரங்குகள் மட்டும் திறக்கப்படவில்லை. வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டாலும் அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படவில்லை.
இதையடுத்து கேரளாவில் சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் ஜனவரி 5ம் தேதி முதல் திறக்கப்படும் எனவும் வழிபாட்டு தலங்களில் கலை நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி 5 முதல் அனுமதிக்கப்படுவர் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் அரங்கில் 100 பேரும், வெளியில் 200 பேரும் அனுமதிக்கவும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.